திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.77 திருச்சேறை - திருக்குறுந்தொகை
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.
1
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
2
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
3
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.
4
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5
தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
6
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
7
குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
8
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
9
பொருந்து நீள்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com